அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இப்படி செய்கிறார்கள் -திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்

by Admin / 26-08-2021 05:02:50pm
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இப்படி செய்கிறார்கள் -திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் பேசும்போது, ‛விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது,' எனக் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை என்று விளக்கம் அளித்தார். மேலும், தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் அதே பெயரில் இருந்திருக்காது, எனத் தெரிவித்தார். இதையடுத்து சட்டசபையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பல்வேறு பள்ளிகளின் தரத்தை உயர்த்தியவர் ஜெயலலிதா.

கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியதற்காக ஜெயலலிதாவுக்கு புகழ் சேர்க்கும் வகையில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்தார். துணைவேந்தர், சிண்டிகேட் உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டனர். ஜெயலலிதா பெயர் இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தினால், அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைக்கப்படுகிறது.

நிச்சயம் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே இதை செய்துள்ளனர். இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். ஏழை எளியோர்கள் குறைந்த கட்டணத்தில் உண்ண வேண்டும் என்பதற்காகவே அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. அதைக்கூட மூடுவேன் என சொல்வது ஏழை மக்களை வஞ்சிப்பதாகத்தான் தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
 

 

Tags :

Share via