இந்து முன்னணி தலைவர் மீது பெண் புகார்

by Editor / 28-08-2021 01:15:29pm
இந்து முன்னணி தலைவர் மீது பெண் புகார்

குமரி மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரன். இவர் மீது, திங்கள் நகர் பகுதியைச் சேர்ந்த 38 வயது ஆன பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், "எனக்கு திருமணமாகி கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இப்போது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறேன். கடந்த 2009ம் ஆண்டு எனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதுபற்றி குளச்சல் அருகே குளவிளை பகுதியில் கோயில் நடத்தி நடத்தி வரும் ராஜேஸ்வரன் என்பவரைச் சந்தித்து கூறினேன்.

அவர் என் மகனை அழைத்து வந்து கோயிலில் தங்கும் படியும், நோயை தீர்த்து தருவதாகவும் சொன்னார். அதை நம்பி நான் அங்கு சென்று என் மகனுடன் தங்கினேன். அப்போது அவர் கோயிலில் வைத்து என்னிடம் தவறாக நடந்தார். அதுபற்றி நான் புகார் அளிப்பேன் என்றவுடன், என்னை சமாதானப்படுத்தி, என் கழுத்தில் தாலிகட்டி செட்டியார் மடம் பகுதியில் வீடு எடுத்து தங்க வைத்தார்.

அதன்பிறகு ஒழுங்காக வீட்டுக்கு வரவில்லை. அதுபற்றி விசாரித்தபோது, என்னை திருமணம் செய்வதற்கு முன்னும், பின்னும் சுமார் 15 பெண்களை கோயிலுக்கு வரவழைத்து ஆசைவார்த்தை கூறி தவறாக நடந்திருப்பதாக தெரியவந்தது. அதுபற்றி 2016ல் நான் இரணியல் காவல் நிலையத்திலும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அளித்துள்ளேன். அவர் ஒரு இயக்கத்தில் உயர் பொறுப்பில் இருப்பதால், அந்த செல்வாக்கை பயன்படுத்தி தப்பித்து வருகிறார்.

07.06.2021 அன்று என்னை பதிவு திருமணம் செய்வதாகக் கூறி வழக்கறிஞர் மூலம் ஆவணம் செய்து தந்துள்ளார். எனவே, போலி சாமியார் ராஜேஸ்வரனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இதுகுறித்து ராஜேஸ்வரன் கூறுகையில், "நான் அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாக கூறியது உண்மைதான். ஆனால், அந்தப் பெண்ணுக்கு பலருடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. என் மீது புகார் அளித்த அதே பெண், தனது கணவருடன் தொடர்பில் இருப்பதாக திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தக்கலை டி.எஸ்.பி அலுவலகத்தில் கடந்த 23ம் தேதி புகார் அளித்திருக்கிறார். தொடர்ச்சியாக அவர் பலர் மூலம் என்னை மிரட்டுகிறார். 1996ல் இருந்தே நான் இயக்க பொறுப்பில் இருக்கிறேன், என் மீது எந்த புகாரும் இல்லை. என்னை கேவலப்படுத்துவதற்காக இதுபோன்று நடந்துகொள்கிறார்கள்" என்றார்

 

Tags :

Share via