கிருஷ்ணஜெயந்தி சிறப்புகள், பலன்கள்

by Editor / 29-08-2021 06:21:51pm
கிருஷ்ணஜெயந்தி சிறப்புகள், பலன்கள்

கிருஷ்ணர் இரவில் பிறந்தார் என்பதால், அந்தி சாயும் வேளையில் பூஜையை செய்வது நல்லது. வீட்டின் வாசலில் கோலமிட்டு, செம்மண் இட வேண்டும். கண்ணனை குழந்தையாகவே பாவிப்பதால், சின்னச் சின்னப் பாதங்களை வாசலிலிருந்து இல்லத்தின் உள்ளே வருவது போல பாதங்களையே கோலமாக வரைந்து பூஜையறை வரையில் கொண்டு செல்லலாம்.
 
வாசலில் தோரணம் கட்டி, மாவிலை வைத்து நிலைப்படியை அலங்கரிக்கலாம். கிருஷ்ணர் விக்கிரகம், சிலை, படத்திற்கு கிருஷ்ண துதிகள், பாடல்கள், நாமங்களை கூறிப் பூக்களாலும், அட்சதைகளாலும் அர்ச்சனை செய்யலாம். அவரவர் வேண்டுதல்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். உலகத்தில் உள்ள அனைவரும் சுகமாக வாழட்டும் என்று வேண்டிப் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். 
கிருஷ்ணருக்கு பிறந்தநாள் என்பதால், குழந்தைகளுக்குப் பிடித்த பட்சணங்கள் செய்யலாம். வீட்டுக் குழந்தைகள் கடவுளுக்கு சமம். இதனால் இன்றைய தினத்தில் அவர்களிடம் கோபப்படாமல், அன்பு செலுத்தி அவர்களை மகிழ்வித்தாலே கிருஷ்ணர் மகிழ்ந்து வேண்டும் வரம் அருள்வார். 
குழந்தைகளுக்கான பட்சணங்களைச் செய்யும் போது கூடவே, வெல்லச் சீடை, உப்புச் சீடை, கைமுறுக்கு, தட்டை, தேங்காய் பர்பி, திரட்டுப் பால் என பலவகையான பட்சணங்கள் செய்யலாம். இதில் நம்மால் இயன்றதை கண்ணனுக்கு படைத்து வேண்டிக் கொண்டால் அவன் நம் கவலைகள் யாவையும் தீர்த்து வைப்பான் என்பது ஐதீகம்.இல்லத்தில் சகல சந்தோஷங்களும், சௌபாக்கியங்களும் நிறையும்.

 

Tags :

Share via