சென்னையில் ; கடலில் குளிக்கச் சென்ற ஆறு பேர் மாயம்

by Editor / 04-09-2021 10:26:01pm
சென்னையில் ; கடலில் குளிக்கச் சென்ற ஆறு பேர் மாயம்

கொரோனா பரவல் காரணமாக சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 23ம் தேதியிலிருந்து கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

மெரினா கடற்கரை திறந்த முதல் நாளிலேயே வேளச்சேரியில் உள்ள ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகினர். அதேபோல், ஆகஸ்ட் 28ம் தேதி திருவான்மியூர் கடற்கரையில் ஒருவரும், பெசன்ட் நகரில் ஒருவரும் ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர்.

இந்நிலையில், மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த மேலும் ஒரு மாணவர் மாயமாகியுள்ளார். முதற்கட்ட விசாரணையில், குரோம்பேட்டையைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் மெரினா கடற்கரையில் தடையை மீறி குளிக்கச் சென்றபோது அக்பர் என்ற மாணவர் மாயமானது தெரிய வந்துள்ளது.

சென்னையில், கொரோனா ஊரடங்கு தளர்வுகளை அடுத்து கடற்கரை திறக்கப்பட்ட 10 நாட்களில், தடையை மீறி கடலில் குளிக்கச் சென்ற ஆறு பேர் மாயமான சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via