உயிரைக் காப்பாத்த அரசுக்கு சீமான் வேண்டுகோள்

by Editor / 06-09-2021 05:25:46pm
உயிரைக் காப்பாத்த அரசுக்கு சீமான் வேண்டுகோள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சிராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் - எழிலரசி தம்பதியின் மகளான 21 மாதமேயான பாரதி எனும் பச்சிளங்குழந்தைக்கு முதுகுத்தண்டுவட தசைநார் சிதைவு (SMA) வகை 2 எனும் அரிய வகை மரபணு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள செய்தியறிந்து பெரும் மன வேதனை அடைந்தேன். முதுகுத்தண்டுவட தசைநார் சிதைவு (SMA) வகை 2 எனும் அரிய வகை மரபணு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பாரதி எனும் பச்சிளம் குழந்தையின் உயிர் காக்க பெற்றோர் செய்வதறியாது கலங்கி நிற்கையில், அவர்களது துயர் போக்க உதவ வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.

உயிர் காக்கும் சிகிச்சைக்கு 16 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துப்பொருட்கள் இரண்டு வாரங்களுக்குள் அவசரமாகத் தேவைப்படுகிறது என்றும், அவற்றை அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்து, முறையாக அனுமதி பெற்று தான் தருவிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

எனவே, உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய இக் கொடிய நோயின் பிடியில் இருந்து மீட்கும் உயிர் காக்கும் சிகிச்சைக்குத் தேவையான மருந்து பொருட்களுக்கான நிதியுதவி மற்றும் வரிவிலக்கை மத்திய அரசிடமிருந்து பெற்று, அன்பு மகள் பாரதி உயிரைக் காக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

 

Tags :

Share via