தடையை மீறி எடுத்து வந்த விநாயகர் சிலைகள் பறிமுதல்: 50 பேர் கைது
கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.இந்நிலையில், இந்து முன்னணி வேலுார் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் மூன்று அடி உயரமுள்ள மூன்று விநாயகர் சிலைகளை மறைத்து ஆட்டோவில் வைத்து இன்று மதியம் 12:30 மணிக்கு வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே எடுத்து வந்து அங்குள்ள அனுமன் கோவிலில் வைத்து பூஜை செய்ய ஊர்வலமாக வந்தனர்.தகவல் அறிந்த வேலுார் ஏ.எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் தலைமையில் போலீசார் பொது இடத்தில் சிலை வைக்க அனுமதி இல்லை என தடுத்தனர். இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் கீழே விழுந்த இந்து முன்னணியினர் பலர் காயமடைந்தனர். பின்னர் மூன்று விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கோட்டத் தலைவர் மகேஷ் உள்ளிட்ட 50 பேரை கைது செய்தனர். இதனால் வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டதால் அந்த பகுதியில் இருந்த கடைகள் மூடப்பட்டன.
Tags :