பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி

by Editor / 16-09-2021 06:07:38pm
பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக வேலை வாய்ப்பு துறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in-ல் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2021 ம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் 17ந் தேதி (நாளை) வழங்கப்பட உள்ளதையடுத்து 17ந் தேதி முதல் அக்டோபர் 1ந் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி, அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளி லும் இவ்வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம்.

மேலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் https://tnvelaivaaippu.gov.in தங்கள் அளவிலேயே ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று புதிதாக பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவுகள் மேற்கொள்ளலாம்.

இந்த தகவல் வேலைவாய்ப்பு மற்றும் பதிவுத்துறை இயக்குநர் கொ.வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via