நாட்டு வெடிகுண்டு வீசியதாக நாடகமாடியவர் கைது

by Editor / 30-09-2021 10:31:38am
நாட்டு வெடிகுண்டு வீசியதாக நாடகமாடியவர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாலகோம்பையைச் சேர்ந்தவர் சூரியன். இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வருகிறது. ஏற்கெனவே இருதரப்பினர் மீது ராஜதானி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலகோம்பை ஊராட்சிக்கு உள்பட்ட கொழுஞ்சிபட்டி மயானத்திற்கு அருகே உள்ள புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து சூரியன் என்பவர் ஆட்டு கொட்டகை அமைத்துள்ளார். இந்த இடத்திற்கு ஒருவருக்கு ஒருவர் சொந்தம் கொண்டாடியதிலும் இருதரப்பினருக்கும் மோதல் போக்கு இருந்துள்ளது. இந்நிலையில் சூரியன் அமைத்திருந்த ஆட்டு கொட்டகையை மாணிக்கத்தின் மகன்கள் முத்துபாண்டி, சின்னசாமி ஆகியோர் சேர்ந்து அடித்து நொறுக்கிவிட்டனர். இதுகுறித்து சூரியன் போலீஸாரிடம் புகார் அளிக்கும்போது, எனது ஆட்டுக் கொட்டகையை அடித்து நொறுக்கியது மட்டுமில்லாமல், நாட்டு வெடிகுண்டுகள் வீசிச் சென்றுள்ளனர் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது கொட்டகை சூறையாடப்பட்ட பகுதியில் 3 நாட்டு வெடிகுண்டுகள் கிடந்துள்ளன. அதுகுறித்து சூரியனிடம் கடுமையாக விசாரித்த போது, காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக நாட்டு வெடிகுண்டுகள் வாங்கி வைத்திருந்ததாகவும், மாணிக்கம் தரப்பினர் மீது கேஸ் ஸ்ட்ராங் ஆவதற்காக தான் என்னுடையை வெடிகுண்டுகளை முத்துபாண்டி, சின்னசாமி ஆகியோர் வீசிச் சென்றதாக பொய் கூறினேன் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து ராஜதானி போலீஸார் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி மணலில் பாதுகாப்பாக புதைத்து வைத்துள்ளனர்.

மேலும் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக நாடகமாடிய சூரியன், முத்துபாண்டி ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சின்னச்சாமியைத் தேடி வருகின்றனர்.இதுகுறித்து ராஜதானி போலீஸாரிடம் விசாரித்தோம், ``இடப்பிரச்னை காரணமாக இருதரப்புக்கும் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வருகிறது. இவர்கள் மீது ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆக்கிரமிப்பு இடத்திற்கு அடிதடி நடத்தியதில் இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் நாட்டுவெடிகுண்டு நாடகம் அரங்கேறியுள்ளது. சூரியன், அவரின் தம்பி துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ் பெற்றுள்ளனர். இதை உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்" என்றனர்.

 

Tags :

Share via