டென்மார்க் பிரதமர் 3 நாள் அரசு முறைப் பயணம் காந்தி சமாதியில் மலரஞ்சலி செலுத்தினார்

by Editor / 09-10-2021 04:06:39pm
டென்மார்க் பிரதமர் 3 நாள் அரசு முறைப் பயணம் காந்தி சமாதியில் மலரஞ்சலி செலுத்தினார்

இந்தியாவுக்கு வருகை தந்த டென்மார்க் பெண் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சனை, பிரதமர் மோடி மகிழ்ச்சியோடு வரவேற்றார்.ஜனாதிபதி மாளிகையில்வழக்கமான சம்பிதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

 ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்குப் போய் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவுகள் பற்றி பேச உள்ளார்.


இந்தியாவும், டென்மார்க்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பசுமை யுக்தி கூட்டுறவை ஏற்படுத்தி கொண்டுள்ளன. அதுபற்றியும், இருநாடுகளுக்கும் இடையே உள்ள பல்வேறு விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளன. டென்மார்க்கில் 60 -க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களும், இந்தியாவில் 200- க்கும் மேற்பட்ட டென்மார்க் நிறுவனங்களும் இருக்கின்றன என்றும், தொழில்நுட்பங்கள், விவசாயம், கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


டெல்லி ஜனாதிபதி மாளிகையில், செய்தியாளர்களிடம் பேசிய மெட்டே, எங்களின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியாவை நாங்கள் நினைக்கிறோம் என்று கூறியுள்ளார்.இதன்பின்னர், டெல்லியில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
அறிஞர்கள், மாணவர்கள், பல்வேறு அமைப்பு பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடுகிறார் மெட்டே பிரெட்ரிக்சன். கடந்த மார்ச் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், நெறிமுறைகள் அமுலில் இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் வெளிநாட்டு முதல் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via