குமரியை சேர்ந்த வாக்குச்சாவடி அலுவலர் மரணம்
விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் வீடூர் வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த மாணிக்கவாசகம்(55) என்பவர் விழுப்புரம் இ.எஸ்.கார்டனில் வசித்து வந்துள்ளார். இவர் வா.பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பொருளாதார பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தார். தேர்தல் பணி காரணமாக இவர், வீடூர் அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் தங்கியிருந்தார். இவருக்கு ரத்த அழுத்த பிரச்சினை இருப்பதால், அதற்கு மாத்திரை எடுத்து கொண்டு வந்திருக்கிறார். ஆனால், நேற்றிரவு வாக்குச்சாவடிக்கு வரும்போது, ரத்த அழுத்த மாத்திரை எடுத்து வராததால் பதற்றமாக இருந்ததாக, அவருடன் இருந்த சக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், அதிகாலையில் மாணிக்கவாசம் அறையில் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து சக ஆசிரியர்கள் இவரை சிகிச்சைக்காக பொம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தற்போது, அவரது உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Tags :