டெஸ்லா நிறுவனம் பேட்டரி கார் தயாரிப்பு ஆலை -மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

by Editor / 10-10-2021 04:37:35pm
 டெஸ்லா நிறுவனம் பேட்டரி கார் தயாரிப்பு ஆலை -மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் பேட்டரி கார் தயாரிப்பு ஆலையைத் தொடங்கினால் அதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் அரசு அளிக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.இந்தியா கான்கிளேவ் 2021 மாநாட்டில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் தயாரிக்கும் பேட்டரி கார்கள் எந்த வகையிலும் தரத்தில் குறைந்தவை அல்ல. இருப்பினும் டெஸ்லா நிறுவனம் சீனாவில் ஆலை அமைத்து அங்கிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதற்குப் பதில் இந்தியாவில் தயாரித்து பிற நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் சப்ளை செய்யலாம் என்று டெஸ்லா நிறுவனத்திடம் தெரிவித்துள்ளேன். ஆனால் அந்நிறுவனம் பேட்டரி கார்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அரசிடமிருந்து எத்தகைய உதவியை எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரிவித்தால் அதை முழுவதுமாக அளிக்க அரசு தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்துள்ளேன். இருப்பினும் டெஸ்லா நிறுவன அதிகாரிகளுடன் வரிச்சலுகை தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.

கடந்த மாதம் மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் கூடி, வரிச் சலுகை கோருவதற்குப் பதிலாக இந்தியாவில் ஆலை அமைத்து உற்பத்தியைத் தொடங்குங்கள் என டெஸ்லா நிறுவனத்திடம் தெரிவித்திருந்தது.

தற்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் பேட்டரி கார்கள் மீது 60% முதல் 100% வரை வரி விதிக்கப்படுகிறது. காப்பீடு, போக்குவரத்து செலவு உள்ளிட்ட அனைத்தையும் சேர்க்கும்போது ஒரு காரின் விலை 40 ஆயிரம் டாலராக (ரூ.30 லட்சம்) உள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு டெஸ்லா நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில் 100% வரை வரி விதிப்பதால் 40 ஆயிரம் டாலரை எட்டி விடுகிறது. முற்றிலும் சுற்றுசூழல் பாதுகாப்பு நிறைந்த இந்த கார்களுக்கு ஒரே நிலையான 40% வரியை விதிக்கலாம் என கோரியது. மேலும் சமூல நல சர்சார்ஜ் 10 சதவீதத்தை தள்ளுபடி செய்யலாம் என குறிப்பிட்டிருந்தது.

வரி குறைப்பு நடவடிக்கையால் இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பாதிப்பும் ஏற்படாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

 

Tags :

Share via