தூத்துக்குடி அருகே பெண் வெட்டிக் கொலை

by Editor / 13-10-2021 05:31:03pm
 தூத்துக்குடி அருகே பெண் வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வடக்கு ஆவாரங்காடு கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பச்சைக்கிளி மனைவி முத்துலட்சுமி (40). இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமகிருஷ்ணன் மகன் ராமர் (50) என்பவருக்கும் பொதுச் சுவர் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில்  வீட்டு முற்றம் பெருக்கிக் கொண்டிருக்கும் போது  முத்துலட்சுமிக்கு ராமருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


இதில் ஆத்திரமடைந்த ராமர்  வீட்டுக்குள் சென்று அருவாளை எடுத்துவந்து முத்துலட்சுமியை சரமாரியாக கழுத்தில் வெட்டினார். இதில் முத்துலட்சுமி அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் ராமர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த முத்துலட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கொலையுண்ட முத்துலட்சுமியின் கணவர் பச்சைக்கிளி  தூத்துக்குடியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ளனர். முத்துலட்சுமியை கொலை செய்த ராமர் தன் குடும்பத்துடன் சண்டையிட்டு அதே கிராமத்தில் பிரிந்து இருந்து வருகிறார். கூலி வேலை செய்து வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


இந்நிலையில் தப்பியோடிய ராமரை ஓட்டப்பிடாரத்தில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஓட்டப்பிடாரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via