தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் தேசிய ஒற்றுமை தின விழா

by Admin / 31-10-2021 05:41:57pm
தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் தேசிய ஒற்றுமை தின விழா



சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு
தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக  ஞாயிற்றுக்கிழமை (31.10.2021) அன்று மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது. சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து முக்கிய அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். கோட்ட ரயில்வே மேலாளர் தேசிய ஒற்றுமை தினம் உறுதி மொழியை வாசிக்க அதிகாரிகள், ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், சாரண, சாரணியர் ஆகியோர் வழிமொழிந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றை பாதுகாக்க எம்மை அர்ப்பணித்துக்கொள்வோம் எனவும், இந்த செய்தியை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவோம் எனவும் நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபட்ட சர்தார் வல்லபாய் படேலின் சேவைகள் மற்றும் தொலைநோக்கு திட்டங்களை நினைவுகூர்ந்து இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொள்கிறோம் எனவும், எமது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு எனது தனிப்பட்ட பங்கினை அளிப்பேன் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்பு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது அணிவகுப்பு மரியாதையை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஏற்றுக்கொண்டார். விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு, முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரி சி. சுதாகரன், உதவி பாதுகாப்பு ஆணையர் ஆர்.சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

Tags :

Share via