ராஜராஜசோழன் சர்ச்சை - வழக்கு ரத்து. உயர்நீதிமன்றம் உத்தரவு

by Admin / 12-11-2021 07:07:42pm
ராஜராஜசோழன் சர்ச்சை - வழக்கு ரத்து. உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு:பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து. உயர்நீதிமன்றம் உத்தரவு

மாமன்னன் ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட  வழக்கை ரத்து செய்து சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் , "2019 ஜூன் 5-ம் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக, பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று குறித்து உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டதாகவும்,.  நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் ‘செந்தமிழ் நாட்டு சேரிகள்’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசியதாகவும்,.பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் என குறிப்பிட்டுள்ளனர். தேவதாசி முறை அவரது ஆட்சிக் காலத்தில் அதிகளவில் இருந்துள்ளது.
பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே தான் குறிப்பிட்டேன் என்றும், இந்த தகவலை வேறு பலரும் பேசி உள்ளனர். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைத்தளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. மேலும் எனது கருத்து, எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. ஆகவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி  பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

Tags :

Share via