புளியங்குடி பகுதியில் சோலார் மின் விளக்கை திருடிய நபர் கைது

by Writer / 03-01-2022 06:36:22pm
புளியங்குடி பகுதியில் சோலார் மின் விளக்கை திருடிய நபர் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரமாக புளியங்கடி நகராட்சி சார்பில் சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

 இந்த நிலையில், அந்த மின் விளக்கானது நேற்று எரியாமல் இருந்துள்ளது. இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கவே, நகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

 அப்போது, சோலார் மின் விளக்கில் உள்ள மின் விளக்குகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து புளியங்குடி போலீஸாரிடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மின்விளக்குகள் திருடப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, மின்விளக்கு திருடப்பட்ட இடத்தில் ஒரு நபர் டிராக்டர் கொண்டு வருவதும், சோலார் மின்கம்பத்தில் டிராக்டரை வைத்து இடித்து, மின் விளக்குகளை கீழே விழச் செய்வதும், கீழே விழுந்த மின் விளக்கை தனது டிராக்டரில் போட்டு எடுத்துச் செல்வதும் மாதிரியான காட்சிகள் பதிவாகியிருந்தன.

 அதனைத் தொடர்ந்து, அந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார் சிசிடிவி கேமராக்களில் பதிவான நபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

 விசாரணையின்போது, அந்த நபர் புளியங்குடி பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் ஆனந்தை சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via