ஸ்பா, மசாஜ் சென்டர்களில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்களால் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படலாம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

by Editor / 04-01-2022 09:03:55pm
ஸ்பா, மசாஜ் சென்டர்களில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்களால் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படலாம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

திருச்சியைச் சேர்ந்தவர்கள் ஸ்பா நடத்த தடையில்லா சான்றிதழ் வழங்க காவல்துறையினருக்கு  உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: “ஸ்பா தொழிலை முறைப்படுத்த சட்டம் இல்லாமல் இருந்தது. ஸ்பா தொழிலுக்கு அரசிடம் இருந்து உரிமம்பெற வேண்டியதில்லை 2018-ல் ஸ்பா தொழில் நடத்த கட்டாயம் உரிமம்பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி மனுதாரர் உரிமம் மற்றும் தடையில்லா சான்றிதழ் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்பா தொடர்பான வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஸ்பா, மசாஜ் மற்றும் தெரபி சென்டர்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், அந்த கேமராக்கள் இயங்கும் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் டிஜிபிக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.

ஸ்பா, மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தனிநபர் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும். மேலும் இது தனியுரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானதாக உள்ளது.

ஸ்பா சென்டர்களில் ஆட்கள் நுழையும்பகுதியையும், வெளியேறும் பகுதியையும் காண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தலாம். இந்த விவகாரத்தில் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரரின் மனுவை காவல்துறையினர் 4 வாரங்களில் பரிசீலித்து தடையில்லா சான்று வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்” என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவில் கூறியுள்ளார்.


 

 

Tags :

Share via