முனைவர் குமரி அனந்தன்,திருச்சி மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு

by Editor / 15-01-2022 06:12:49pm
முனைவர் குமரி அனந்தன்,திருச்சி மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு


2022 -ம் ஆண்டிற்கான `அய்யன் திருவள்ளுவர் விருது’ மு.மீனாட்சி சுந்தரத்திற்கும், `2021 ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர்’ விருது காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்பட இருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் திருக்குறள் நெறி பரப்பியும், திருக்குறள் தொடர்பான தொண்டு புரிந்து வருபவர்களுக்கு, `அய்யன் திருவள்ளுவர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.2009-ம் ஆண்டு முன்னாள் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி தலைமையில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராகவும் கன்னியாகுமரி மாவட்டம் காப்பியக் காட்டில் தொல்காப்பியர் சிலை நிறுவி திறக்கப்படுவதற்கு முதன்மையானவர்களுள் ஒருவராக இருந்து பணியாற்றிவரும் பெங்களூர் இந்தியன் தொலைபேசி தொழிலகத்தில் முதுநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் பெங்களூரில் வசிக்கும் திருச்சியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரத்துக்கு தமிழ்நாடு அரசு 2022-ம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருதினை வழங்குகிறது.

இதேபோன்று காமராசர் உடன் இணைந்து பணியாற்றிய தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் எம்.பி, எம்.எல்.ஏ ஆகிய பதவிகளை வகித்தரும் தமிழ் இலக்கியங்களில் புலமையும், பேச்சாற்றல்  மிக்கவராகவும் தமிழ் இலக்கியவாதியாகவும், சிறந்த நூல்களை படைத்தவரும் பன்முகத் திறன் கொண்ட சொல்லின் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு தமிழக அரசு 2021 -ம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படுகிறது என்றும் விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ஒரு லட்ச ரூபாயும், ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Tags :

Share via