போலீசார் - பொதுமக்கள் இடையேயான உறவை மேம்படுத்த காவல் ஆணையம் அமைப்பு-முதல்வர் உத்தரவு.

by Writer / 19-01-2022 04:27:53pm
போலீசார் - பொதுமக்கள் இடையேயான உறவை மேம்படுத்த காவல் ஆணையம் அமைப்பு-முதல்வர் உத்தரவு.

கடந்த 1969,1989 மற்றும் 2006ம் ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு முறையே மூன்று காவல் ஆணையங்களை அமைத்தது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் திமுக அரசு அமைந்ததும் நான்காவது முறையாக போலீஸ் கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

காவலர்- பொதுமக்கள் இடையே உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தவும், புதிய பயிற்சி முறைகளை பரிந்துரைத்திடவும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு காவல்துறையானது குற்றங்களை தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல் குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

மாநிலத்தின் ஒட்டுமொத்த வளம், பொருளாதார வளர்ச்சி, அமைதியான சூழல், சமூக நல்லிணக்கத்தை பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளில் காவல்துறை தனது முயற்சியை தொடர்ந்து தோய்வில்லாமல் செய்து கொண்டிருக்கிறது. மாநிலத்தின் அமைதியை பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கிய பணிகளை ஆற்றி வரும் காவல்துறையின் பணிகளை மேலும் சிறக்கப் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

கடந்த 1969,1989 மற்றும் 2006ம் ஆண்டுகளில் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு முறையே மூன்று காவல் ஆணையங்களை அமைத்தது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் திமுக அரசு அமைந்ததும் நான்காவது முறையாக போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு ஒரு கால வரையறைக்குள் அதன் பரிந்துரைகள் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது.

அதனை நிறைவேற்றும் விதமாக கடந்த 13.09.21 அன்று சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் காவலர் பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும் காவல் துறை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான திட்டங்களையும் புதிய பயிற்சி முறைகளையும் பரிந்துரைக்கும் நோக்கத்துடன் காவல் ஆணையம் ஒன்று மீண்டும் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாக புதிய காவல் ஆணையம் ஒன்றை அமைத்திடவும், சி.டி. செல்வம் ஆணையத்தின் தலைவராகவும் கா. அலாவுதீன், இ.ஆ.ப., (ஓய்வு), முனைவர் கே. இராதாகிருஷ்ணன், இ.கா.ப., (ஓய்வு), மனநல மருத்துவர் சி.இராமசுப்பிரமணியம், மேனாள் பேராசிரியர் முனைவர். நளினி ராவ் ஆகியோரை உறுப்பினர்களாகவும் காவல் துறை (குற்றப்புலனாய்வு) கூடுதல் இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., உறுப்பினர்-செயலராகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via