குழந்தை உள்பட 7 பேரை சுட்டுக்கொன்ற ரஷிய படை

by Admin / 13-03-2022 11:19:42am
 குழந்தை உள்பட 7 பேரை சுட்டுக்கொன்ற ரஷிய படை

போர் காரணமாக உக்ரைனில் இருந்து மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.

பொது மக்கள் வெளியேறுவதற்காக சில மணிநேரம் தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்துவதாக ரஷியா தெரிவித்தது. இதையடுத்து மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.

இதற்கிடையே நாட்டை விட்டு வெளியேறும் மக்களை ரஷிய படையினர் தடுத்து வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது. மேலும் மக்கள் செல்லும் பாதுகாப்பு பாதையில் தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் அகதிகளாக தப்பி சென்ற குழந்தை உள்பட 7 பேரை, ரஷிய படை சுட்டுக்கொன்றதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது. தலைநகர் கீவ் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குழந்தை உள்பட 7 பேர் அங்கிருந்து வெளியேறி சென்ற போது அவர்களை ரஷிய படையினர் தடுத்து நிறுத்தினர்.

அவர்களை மீண்டும் கிராமங்களுக்கே செல்லுமாறு மிரட்டினர். ஆனால் அவர்கள் செல்ல மறுத்ததால், குழந்தை உள்பட 7 பேரையும் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதேபோல் மரியுபோல் நகரில் அகதிகளாக வெளியேறும் மக்களை ரஷிய படைகள் தடுத்து வருவதாக அந்நகர மேயர் தெரிவித்தார்.

 

Tags :

Share via