ராம நவமி விரதம் முறை..

by Editor / 09-04-2022 07:59:26pm
 ராம நவமி விரதம் முறை..

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் இந்த பூமியில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் தான் ராமபிரான். தர்மத்தின் வழியில் சென்று அதர்மத்தை எப்படி அழிப்பது? ஒரு நாட்டை ஆளக்கூடிய அரசன் எப்படி இருக்க வேண்டும்? பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டும்? உடன்பிறந்தவர்களை எப்படி மதிக்க வேண்டும்? கட்டிய மனைவியை எப்படி நடத்த வேண்டும்? எதிரியை கூட எப்படி நண்பனாக பார்க்க வேண்டும்? இப்படியாக இந்த பூமியில் ஒரு மனிதன் எப்படி நல்ல மனிதனாக வாழ்வது? என்பதை நாம் ராமபிரானிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வளவு சிறப்புகளை கொண்ட ராமபிரான் அவதரித்த தினத்தில் விரதம் இருந்து வழிபட்டால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். இந்த வருடம் ராம நவமி ஏப்ரல் 10ஆம் தேதி, (நாளை) பங்குனி 27ஆம் நாள் வருகின்றது. ராம நவமி அன்று ராமர் கோயில்களில் ராமருக்கு பட்டாபிஷேகம், ராமர் திருமணம் என்று கோலாகலமாக திருவிழாக்கள் கொண்டாடப்படும்.

 மேலும் வீட்டில் இருந்து விரதம் இருக்கும் முறையையும், விரதத்தின் பயனையும் பார்க்கலாம். வழிபடும் முறை :

 எந்தவொரு பண்டிகையை நம் வீட்டில் கொண்டாட வேண்டும் என்றாலும் முதலில் வீட்டையும், பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதிகாலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டில் ராமரின் பட்டாபிஷேக படம் இருந்தால் அதை பூஜைக்கு வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் அனுமனின் படத்தை பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ராமரின் படத்திற்கு துளசி இலைகளால் அலங்காரம் செய்து வாசனை மிகுந்த பூக்களை சூட்டி பூஜைக்கு தயார் செய்து வைக்கவும்.

பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, ராமருக்கு பிடித்த பால் பாயாசம் மற்றும் பானகத்தை நைவேத்தியமாக வைக்க வேண்டும். 

 பூஜை அறையில் அமர்ந்து 'ஸ்ரீ ராம ஜெயம்" மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். மூன்று முறை உச்சரித்தாலும் தவறில்லை.

விரத முறை : 

 ராம நவமி அன்று காலை 6.00 முதல் 8.00 மணிக்குள் வழிபாட்டினை நிறைவு செய்து கொள்ளவும்.

 காலை நேரத்தில் பூஜை செய்ய முடியாதவர்கள் மாலை 5.00 முதல் 7.30 மணிக்குள் பூஜையை செய்து அதன் பின்பு விரதத்தை நிறைவு செய்யவும்.

 மாலை நேரத்தில் ராமருக்கு பூஜை செய்து வழிபாட்டை முடித்து விட்டு, அதன் பின்பு இறைவனுக்கு நைவேத்தியமாக வைத்த பிரசாதத்தை முதலில் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளவும்.

விரதத்தின் பயன்கள் :

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் அடுத்தவர்களுடைய மனதை எப்போதுமே, எந்த சூழ்நிலையிலும் புண்படுத்தாமல் தான் நடந்து கொள்ள வேண்டும்.

 நம்முடைய வாழ்க்கை முழுவதிலும் இதை கடைபிடிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ராம நவமி அன்று ஒருநாள் மட்டுமாவது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், அடுத்தவர்களது மனதை புண்படுத்தாமல் உங்கள் மனதிற்குள் 'ராமா ராமா" என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தால் பாவங்கள் நீங்கும். நினைத்த காரியம் உடனே நடக்கும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் கூடிய விரைவில் குழந்தை பிறக்கும்.

 எந்தவொரு விஷயத்தை எடுத்தாலும் காரியத்தடை ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபட்டு இருந்தால் இந்த விரதத்தை கடைபிடிக்கும் பட்சத்தில், வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
 

 

Tags :

Share via