கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் வியாபாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை.

by Editor / 14-04-2022 10:45:45pm
கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள்  வியாபாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் முற்றிலும் ஒழிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த 28ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ நடந்து வருகிறது. கடந்த 15 நாட்களில் 1,778 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 2,400 கிலோ கஞ்சா, 135 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதுபோல 4,334 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 31.2 டன் குட்கா மற்றும் 72 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் 3 கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கி கணக்குகள், 6 நிலம், வீட்டு மனை, வாகனம் போன்ற சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல், மதுரை மாவட்டத்தில் பிரபல 7 கஞ்சா வியாபாரிகளின் 29 வங்கி கணக்குகள், 4 நிலம், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 6 கஞ்சா வியாபாரிகளின் 8 வங்கி கணக்குகள், வீட்டுமனை, வாகனம் போன்ற சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், நகர காவல் ஆணையர்களும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கி கணக்குகளையும், சட்ட விரோதமாக வாங்கிக் குவித்த சொத்துக்களையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via