பணத்திற்காக தம்பியை கொலை செய்த அண்ணன்

by Editor / 28-05-2022 10:42:01pm
பணத்திற்காக தம்பியை கொலை  செய்த அண்ணன்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமுடிமண் கிராமத்தைச் சேர்ந்தவர் லெட்சுமண பெருமாள். இவர் மனைவி கற்பகம். இவர்களுக்கு செல்வகுமார், கார்த்திக் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். செல்வகுமார் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் வந்திருக்கும் அவர், சாத்தூரில் உள்ள தன் மனைவி ஜெயந்தியின் இல்லத்தில் வசித்துவருகிறார். இவருடைய தம்பி கார்த்திக் சொந்த ஊரிலேயே ஆட்டோ ஓட்டிக்கொண்டு தன் மனைவி,இரண்டு வயது ,குழந்தை, பெற்றோருடன் வசித்துவருகிறார்.

ஆட்டோ தொழில் சரியாக இல்லாததால், வேறு தொழில் தொடங்குவதற்காக தன் தாயிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் பணமும், மூன்றரை சவரன் தங்க நகையும் வாங்கியிருந்தாராம் கார்த்திக். இந்த விவகாரம் செல்வகுமாருக்கு தெரிந்துள்ளது. அதையடுத்து, ராணுவத்திலிருந்து விடுமுறையில் வந்தநாள் முதல் தனக்கும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணமும், தங்க நகையும் வேண்டும் என தாய், தந்தையிடம் கேட்டு சண்டை போட்டு வந்திருக்கிறார்.

 
இந்த நிலையில், கொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு கோயில் திருவிழாவுக்கு கார்த்திக், அவர் மனைவி மாலினி, தாயார் கற்பகத்துடன் சென்றிருந்தார். அப்போது செல்வகுமார் நகை, பணம் குறித்து வீட்டில் தனியாக இருந்த தந்தை லெட்சுமணபெருமாளிடம் சண்டை போட்டிருக்கிறார். அப்போது அவர் தந்தை, தன்னிடம் தற்போது பணம் இல்லை என்றும்,இருந்த பணத்தை தம்பியிடம் கொடுத்து விட்டதாகவும் கூறினாராம்.கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு கார்த்திக், அவர் மனைவி கற்பகம், உறவினர்கள் சிவா என்ற சுடலைமணி, கண்ணன் ஆகிய 4 பேரும் கொப்பம்பட்டியிலிருந்து மேலமுடிமண் கிராமத்திற்கு திருப்பியிருகின்றனர்.அந்த  அங்கு வந்த கார்த்திக்கிற்கும் செல்வகுமாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த செல்வகுமார் கார்த்தியின் மார்பு, வயிறு ஆகிய இடங்களில் கத்தியால் குத்தினார். உறவினர்கள் படுகாயமடைந்த கார்த்திக்கை காரில் ஏற்றிக்கொண்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினர்.போலீஸார்  செல்வகுமாரைக் கைதுசெய்து இந்தச் சம்பவம்குறித்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : The brother who killed his brother for money

Share via