தொழிலதிபரை கடத்த பக்கா ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த பெண் மருத்துவர்கைது.

by Editor / 30-08-2022 04:07:26pm
தொழிலதிபரை கடத்த பக்கா ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த  பெண் மருத்துவர்கைது.

சென்னை தியாகராயநகர் ராமசாமி தெருவை சேர்ந்தவர் தொழில் அதிபர் சரவணன் (வயது 46). கடந்த 20ம் தேதி இவரை வீடு புகுந்து ஒரு கும்பல் காரில் கடத்தியது. இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் சில மணி நேரத்திலேயே அவர் மீட்கப்பட்டார். மேலும் தொழில் அதிபரை கடத்தியதாக மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கியராஜ் (42), கோவை சிறை காவலர் நாகேந்திரன் (31), கரூர் அரவிந்த்குரு (23), திருப்பூர் கல்லூரி மாணவர் அப்ரோஸ் (23), மதுரை அஜய் (24), விஜயபாண்டி (25) என 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

கடத்தல் கும்பலிடம் இருந்து பொம்மை துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் சரவணன் தனது தொழிலை விரிவுபடுத்த ஆரோக்கியராஜிடம் வாங்கிய ரூ.1 கோடி கடனை திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததால் மிரட்டி கடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த கடத்தலுக்கு திட்டம் போட்டு கொடுத்தது தோல் சிகிச்சை நிபுணரான டாக்டர் அமிர்தா என்பதும், அவர் கிழக்கு கடற்கரை சாலையில் கிளினிக் நடத்தி வருவதும் தெரியவந்தது.இந்நிலையில், தலைமறைவாக இருந்த மருத்துவர் அமிர்தா கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் டாக்டர் அமிர்தாவும், தொழில் அதிபர் சரவணனும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மதுபான கூடத்தில் அறிமுகமாகி உள்ளனர். பின்னர் இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். ஆரோக்கியராஜும் இவர்களுடன் பழக்கத்தில் இருந்துள்ளார். இதற்கிடையே மருத்துவர் அமிர்தாவுக்கும், சரவணனுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை ஏற்பட்டு பகை உருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆரோக்கியராஜும் சரவணனிடம் பணத்தை இழந்திருப்பது டாக்டர் அமிர்தாவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சரவணனை கடத்தி பணத்தை பெற அவர்கள் திட்டம் போட்து தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின்னர் டாக்டர் அமிர்தா சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags :

Share via