சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி இன்று பணி ஓய்வு பெறுகிறார்

by Editor / 12-09-2022 09:17:00am
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி இன்று  பணி ஓய்வு பெறுகிறார்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனால் உயர்நீதி மன்ற வளாகத்தில் இன்று அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது.

1960-ல் ராஜஸ்தானில் பிறந்த முனீஷ்வர் நாத் பண்டாரி, அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக 2007ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019-ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டுப் பின்னர், பொறுப்பு நீதிபதியாகவும் இருந்தார். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, கடந்த ஆண்டு நவம்பர் 22-ம் தேதி பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார்.தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு இன்று 62 வயது நிறைவடைவதை அடுத்து, இன்று மாலையுடன் அவர் ஓய்வுபெறுகிறார்.

அவர் விசாரித்த வழக்குகளில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்தது, கோயில்களில் வேட்டி அணிந்து வரக் கோரிய வழக்கில் நாடு முக்கியமா? மதம் முக்கியமா? என கேள்வி எழுப்பியது, அரசு நிலங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது, அகற்றாத அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராகவைத்து அறிவுரை கூறியது.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு வார்டு ஒதுக்கியதை ரத்து செய்தது, நீலகிரி கோயிலில் பூசாரியாக உள்ள சிறுவனுக்கு தடையில்லாத கல்வி கிடைக்க உத்தரவிட்டது, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை அங்கீகார தேர்தல் ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது, கைதிகளுக்கு தாம்பத்ய உரிமைக்காக பரோல் வழங்க கூடாது என உத்தரவிட்டது,

ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜீவ் கொலையாளிகளில் ஒருவரான நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது, மருத்துவ மேற்படிப்பில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது, அர்ச்சகர் நியமனம் தொடர்பான அரசின் உத்தரவை உறுதி செய்தது, மருத்துவ படிப்புகளை வழங்கும் தனியார் கல்வி நிலையங்கள் 50 சதவீத இடங்களை அரசு கட்டணத்தில் வசூலிக்க வேண்டுமென்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டது போன்ற வழக்குகள் முனிஸ்வர் நாத் பண்டாரிக்கு முக்கியமானது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் பிரிவு உபச்சார பாராட்டு விழாவில், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் பாராட்டு தெரிவிக்க உள்ளனர். தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி ஓய்வுபெறுவதால் அவரை டெல்லியிலுள்ள கடத்தல்காரர்கள் மற்றும் அன்னிய செலாவணி மோசடியாளர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்கும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (SAFEMA) தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது. அதன்படி ஓரிரு நாட்களில் அவர் பதவியேற்க உள்ளார்.
 

 

Tags :

Share via