ஓன்றிய அரசு விவகாரம்- பா.ஜ.க விசாரிக்ககோரி கடிதம்!

by Editor / 11-06-2021 07:48:41am
ஓன்றிய அரசு விவகாரம்- பா.ஜ.க  விசாரிக்ககோரி கடிதம்!

'மத்திய அரசை ஒன்றிய அரசு என தி.மு.க., நிதி அமைச்சர் தியாகராஜன் பேசி வரும் விவகாரத்தில், ஏதேனும் சதி இருக்கிறதா என்பது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.சமீப காலமாக தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும், இந்திய அரசை 'ஒன்றிய அரசு' எனக் குறிப்பிட்டு வருவதன் பின்னால், திராவிட நாடு என்ற கோரிக்கை ஒளிந்து கிடக்கிறது என்ற குற்றச்சாட்டை, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எழுப்பி உள்ளார்.தி.மு.க., நிதி அமைச்சர் தியாகராஜனும், சமீபத்தில் அளித்த பேட்டியில், மத்திய அரசை, ஒன்றிய அரசு என குறிப்பிட்டு, 'சட்டத்தில் அப்படி தான் இருக்கிறது' என விளக்கம் அளித்தார். அவரை தொடர்ந்து தி.மு.க.,வினர், மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, 'திராவிட மக்கள்' என 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிடப்பட்டது.மன்னார்குடி தி.மு.க., - எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா தன் முகநுால் பக்கத்தில், 'ஒன்றிய உயிரினங்கள்' எனக்கூறி, 'டைனோசர்' விலங்கு படம் பதிவிட்டுள்ளார்.மேலும், தி.மு.க., - ஐ.டி., அணியினர், 'ஒன்றிய உயிரினங்கள்' என்ற தலைப்பில், அனைத்து வகை மிருகங்களின் படங்களுடன், 'வன விலங்குகளின் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு; ஒன்றியத்தின் பாதுகாப்பு' என, பதிவிட்டுள்ளனர்.சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையை சேர்ந்த நாகராஜன், தன் முகநுால் பக்கத்தில், மத்திய அரசு அளித்த தடுப்பூசி சான்றிதழில், நான்கு சிங்கம், அசோக சக்கரம் உள்ளடக்கிய, மத்தியஅரசின் முத்திரையை எடுத்து விட்டு, அதில், தமிழக அரசின் கோபுர முத்திரையை மாற்றிவைத்துள்ளார். இது தொடர்பான புகார் மனுவை, பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில், பா.ஜ., பிரமுகர் நிலேஷ்ராம் அளித்துள்ளார்.அப்புகார் மனுவில், மத்திய அரசின் முத்திரை மாற்றப்பட்டுள்ளது என்றும், பிரதமர் மோடி மீது அவதுாறு பரப்பப்பட்டுள்ளது என்றும், கூறப்பட்டுள்ளது. தமிழக போலீசார், உடனே வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பா.ஜ.,வினர் மனு அனுப்பி உள்ளனர்.இது குறித்து, தமிழக பா.ஜ., தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறியிருப்பதாவது: நிதி அமைச்சர் தியாகராஜன் போன்றோரின் பிரிவினை பேச்சால், தற்போது, மத்திய அரசின் சின்னத்தை மாற்றும் அளவிற்கு சென்றுள்ளனர், தி.மு.க,வினர்.'திராவிட மக்கள், ஒன்றிய உயிரினங்கள்' என, பல திட்டங்கள், திடீரென உருவாக்கப்படுவதற்கு பின்னால், தி.மு.க.,வின் 1962ம் ஆண்டு பிரிவினை கோரிக்கை போன்ற ஏதேனும் சதித் திட்டம் உள்ளதா என்ற சந்தேககம் எழுந்துள்ளது. இது தொடர்பாக, மத்திய உள்துறை விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

 

Tags :

Share via