ஆட்சியர் அலுவலக மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். இவர் கடந்த 2008-09 இல் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். அதில் எழுத்துத் தேர்வில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், வேடியப்பன் காவலர் தேர்வில் பங்கேற்றவர்கள் மற்றும் தேர்வானவர்களின் விபரம் மற்றும் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுள்ளார்.
ஆனால், தகவல் ஆணையரிடம் இருந்து வந்த வித தகவலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வேடியப்பன், தனது மனைவி மோகனாவுடன் இன்று காலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தார். வேடியப்பன் மனு அளிக்க சென்ற நிலையில், அவரது மனைவி மோகனா திடீரென ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் மாடி மீது ஏறி, கீழே குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
அப்போது, தனது கணவர் வேலை கிடைக்காததற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தனர். தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் சித்ரா, மோகனாவிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
Tags :