சிறுமிகள் கொலை முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை

by Staff / 16-09-2022 02:19:13pm
சிறுமிகள் கொலை  முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியில் பட்டியலினத்தை சேர்ந்த சகோதரிகள், கழுத்து நெரித்து கொலை செய்யபட்ட பின்பு மரத்தில் தொங்கவிடப்பட்டனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக உத்தரபிரதேச காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சகோதரிகள் இருவரும் சிறுமிகள் என்றும் இதே கிராமத்தை சேர்ந்த சோட்டு என்பவருக்கு இந்த இருவரில் ஒருவரை தெரியும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் அந்த சகோதரிகளுக்கு சோட்டுதான் அறிமுகம் செய்து வைத்துள்ளார். கல்யாணம் செய்து கொள்வதற்கு இருவரும் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கும்பல் சிறுமிகளை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே, சிறுமிகள் உயிரிழப்புக்கு நியாயம்கோரி அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த கொலை வழக்கு தொடர்பாக சோட்டு, சுஹேல், ஜூனைது, ஹபிசுல் ரெஹ்மான், ஹரிமுதீன், மற்றும் ஆரிப் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான ஜூனைத் போலீசார் பிடியில் இருந்து தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.
 
இதுதொடர்பான வீடியோ காட்சியை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில், வயல்வெளியில் இருந்து ஜூனைத்தை போலீசார் இரண்டுபேர் பிடித்து வருவதுபோன்றும், அவரது வலதுகாலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் வடிவதுபோன்றும் உள்ளது. ஜூனைத் தான் அந்த சிறுமிகளை அழைத்து வரசொன்னதாகவும், அதன்பேரில் சோட்டு அவர்களை கடத்தி வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்கள் சிறுமிகளை கரும்பு தோட்டத்திற்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து, சிறுமிகள் தங்களை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சிறுமிகளை கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

Tags :

Share via