அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை காரணம் என்ன..?
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தேவராஜ், சென்னை ஓட்டேரியிலுள்ள நாராயணா முதல் தெருவில் அமைந்துள்ள இல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இவர் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தேவராஜ் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது உயிரிழப்பிற்கான முழு காரணம் உடற்கூராய்வு அறிக்கைக்கு பின்னரே தெரியவரும் என்பதால் அது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேவராஜ் தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு அவரது இல்லத்திற்கு உடனடியாக சென்ற அமைச்சரும் அவரது சகோதரருமான சேகர் பாபு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதேபோல் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தேவராஜ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
Tags : அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை