இன்றும், நாளையும் அநேக இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழை.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய கடற்கரை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் அநேக இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. ஒரு சில நேரங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்து விடுகிறது. இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. இதன் காரணமாக வரும் 10ம் தேதி முதல் 11ம் தேதி ஆகிய இரு நாட்களும் கனமழையும், ஒருசில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
தென்மாவட்டங்களான ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்கிறது.
Tags :