குழந்தை கட்டை விரலை சேர்க்க நவீன மருத்துவமனையில் சிகிச்சை
தஞ்சை மாவட்டம், வடவூர், காட்டூரைச் சேர்ந்த கணேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் மனைவி பிரியதர்ஷிணிக்கு தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஊசி மூலம் மருந்து செலுத்துவதற்காக இடது கையில் வென்பிளான் செலுத்தியுள்ளனர். அதை எடுக்கும்போது, நர்ஸ் கவனக்குறைவால் இடது கை கட்டை விரலையும் சேர்த்து வெட்டி துண்டித்தார். எனவே, என் குழந்தையை வேறு தனியார் மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்கவும், தஞ்சை அரசு மருத்துவமனையில் தேவையான அளவு நர்ஸ்களை நியமிக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ''குழந்தையின் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும். குழந்தையின் கட்டை விரலை அறுவை சிகிச்சை மூலம் சேர்த்திடும் வகையில் நவீன மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார்.
Tags :