67,000பேர் தேர்வை எழுதவில்லை - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தகவல்

by Editor / 28-11-2022 07:42:27am
 67,000பேர்  தேர்வை எழுதவில்லை  -    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தகவல்

 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு துறை காவலர்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 3552 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தென்காசி,புதுக்கோட்டை உள்ளிட்ட 35 மாவட்டங்களில், 295 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, சுமார் 3.66 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இதில் 2,99,887 பேர் ஆண்கள், 66,811 பேர் பெண்கள், 59 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

காலை 8.30 மணிமுதல்  தேர்வு மையத்துக்கு வந்த மாணவர்களை காவல்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்த பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய, இந்த தேர்வானது மதியம் 12.40 மணிக்கு நிறைவடைந்தது.

இந்நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த 3.66 லட்சம் பேரில் 67,000 பேர் தேர்வை எழுதவில்லை என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தேர்வில் 70 மதிப்பெண்களுக்கு பொது அறிவு கேள்விகளும், 80 மதிப்பெண்கள் தமிழ் தகுதி தேர்வு கேள்விகளும் இடம்பெற்றுள்ளது. பொது அறிவு கேள்விகளும் தமிழிலேயே கேட்கப்பட்டதால் ஆங்கில வழிக் கல்வி படித்தவர்களுக்கு, கேள்விகளை புரிந்து கொள்ள மிகவும் சிரமமாக இருந்ததாக தேர்வை எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு பட்டம் பெற்றவர்களும், கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களும் தேர்வு எழுதுவதால், கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகமாவதாகவும், இந்த வேலைக்கு குறைந்தபட்ச தகுதி உடையவர்களுக்கு வேலை பறிபோகும் சூழ்நிலை ஏற்படுகிறது எனவும் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர்.

 67,000பேர்  தேர்வை எழுதவில்லை  -    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தகவல்
 

Tags :

Share via