மூன்று மாவட்டங்களில் முதல்வர் இன்று சுற்றுப்பயணம்.

by Editor / 28-11-2022 08:10:27am
மூன்று மாவட்டங்களில் முதல்வர் இன்று சுற்றுப்பயணம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மற்றும் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, காலை 8.50 மணிக்கு அவர் திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, காலை 9.30 மணிக்கு திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு செல்கிறார். அங்கு ரூ.25 கோடி செலவில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பின்னர், நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனத்தையும், மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் முதலமைச்சர் கொடியசைத்து வழி அனுப்பி வைக்கிறார்.

தொடர்ந்து, பெரம்பலூருக்கு செல்லும் முதலமைச்சர் மதியம் 12 மணிக்கு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூருக்கு சென்று, அங்கு சிப்காட் தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்கு சென்று, மதிய உணவு சாப்பிட்டு ஓய்வு எடுப்பார்.

பின்னர் மாலை 5.15 மணிக்கு கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகைமேட்டுக்கு சென்று அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் அரசு விருத்தினர் மாளிகை திரும்பும் அவர் இரவு உணவை முடித்துவிட்டு அங்கேயே தங்கி ஓய்வு எடுக்கிறார்.

நாளை காலை 9.30 மணிக்கு அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். அத்துடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கியும் வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் திருச்சிக்கு காரில் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 12.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை வருகிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via