மனைவிக்கு தீ வைத்து கொன்ற கணவர் கைது

by Staff / 29-11-2022 12:38:29pm
மனைவிக்கு தீ வைத்து  கொன்ற கணவர் கைது

விழுப்புரம் கண்டமங்கலம், அதனூர் அடுத்த ஆசாரங்குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் சங்கீதா(வயது 24). இவர் வழுதாவூர்-காட்டேரிக்குப்பம் மெயின்ரோட்டை சேர்ந்த டிரைவர் முத்துக்குமரன் என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் முத்துக்குமரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த சங்கீதா தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் அலறி துடித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே சங்கீதா இறப்பதற்கு முன்பு பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் ’குடும்ப பிரச்சினை காரணமாக நான் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றேன். ஆனால் பின்னால் வந்த என் கணவர் என் உடலுக்கு தீ வைத்தார். தீக்குளித்தது தொடர்பாக போலீசிடமோ, நீதிபதியிடமோ, மருத்துவரிடமோ எதுவும் சொல்லக் கூடாது, அப்படி கூறினால் உனக்கு தீ வைத்தது போல் குழந்தைகளையும் தீ வைத்து கொன்று விடுவேன் என மிரட்டினார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் மனைவியை எரித்துக் கொன்றதாக முத்துக்குமரனை நேற்று அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கண்டமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via