நெல்லை எஸ்.பி.யை கைது செய்து ஆஜர்படுத்த ஐ.ஜிக்கு உத்தரவிட்ட ஆணையம்

by Editor / 02-12-2022 10:28:23pm
நெல்லை எஸ்.பி.யை  கைது செய்து ஆஜர்படுத்த  ஐ.ஜிக்கு உத்தரவிட்ட ஆணையம்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், சிவந்திப்பட்டி கிராமத்தைச்சேர்ந்த பரமானந்தம் என்கிற பட்டியல் இனத்தை சேர்ந்தவரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, வழியை மறித்து வேலியிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடந்த ஜூன் 10ஆம் தேதி தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இருமுறை அவகாசம் வழங்கிய பிறகும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் நோட்டீசுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்மதித்து  அறிக்கை தாக்கல் செய்யாததால், ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி கடந்த அக்டோபர் 27ஆம் தேதி ஆணையம் உத்தரவிட்டது. அந்த அழைப்பாணையைப் பெற்ற பின்னரும், நெல்லை எஸ்.பி. ஆஜராகாத நிலையில், இறுதி வாய்ப்பாக நவம்பர் 30ல் ஆஜராக வேண்டும் எனவும், நோட்டீசை அலட்சியப்படுத்தியதற்காக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என காரணம் கூறவும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி நவம்பர் 30ஆம் தேதி, ஆணையம் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தபோது, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. ஆஜராகாமல், அவருக்கு பதிலாக கூடுதல் எஸ்.பி. மாரிராஜன் என்பவரை ஆஜராக அனுப்பி உள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ஆணையத்தின் நோட்டீஸ்கள் தம்மைக் கட்டுப்படுத்தாது என்றும், ஆணையத்திற்கு நேரில் ஆஜராவது தகுதிக்கு குறைவானதாகவும் எஸ்.பி கருதுவதாக குறிப்பிட்டுள்ளது.

எனவே திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் என்பவருக்கு ரூ.500 அபராதம் விதித்து, அதை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் எஸ்.பி. சரவணனை கைது செய்து ஆஜர்படுத்தும்படி தென் மாண்டல ஐ.ஜி.-க்கு உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via