தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 238 கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

by Staff / 08-12-2022 05:03:04pm
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 238 கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தென்காசி மாவட்டத்திற்கு முதல் முறையாக ரயில் மூலம் இன்று காலை 7.30 மணிக்கு தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

அவரை தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


 தொடர்ந்து, ரயில் நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அப்போது, குற்றாலம் செல்லும் சாலையின் இருமருகிலும் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஒய்வெடுத்துவிட்டு சுமார் 10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு செங்கோட்டை வழியாக கணக்கப்பிள்ளை வலசை பகுதியில் விழா நடைபெறும் அரங்கிற்கு சுமார் 11.30 மணியளவில் வருகை தந்தார். அப்போது, வரும் வழியில் வாழை தோரணங்கள் கட்டி சாலையின் இருமருகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வருகை தந்தனர்.

விழா மேடைக்கு, முதல்வர் வந்தவுடன், முதலாவதாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கையும், தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கையும் , வேளாண்மை வளர்ச்சி துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கையும் பார்வையிட்ட அவர், விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, விழா நடைபெறும் மேடைக்கு வருகை தந்த முதல்வர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் சுமார் 22 கோடியே 20 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற 57 திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்தியல்துறை உள்ளிட்ட 11 துறைகளில் சுமார் 34 கோடியே 14 லட்சம் மதிப்பில் 23 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

 தொடர்ந்து, 33 துறைகளின் வாயிலாக ஒரு லட்சத்து மூவாயிரத்து ஐம்பத்தி ஏழு பயனாளிகளுக்கு, சுமார் 182 கோடியை 52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதற்கு முதற்கட்டமாக சுமார் 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னோட்டமாக வழங்கினார்.

 மொத்தமாக, சுமார் 238 கோடியே 68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் இன்று ஒரே நாளில் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசியதாவது:-

தென்காசி வந்தவுடன் இந்த மண்ணை போல என் மனம் குளிர்ச்சடைந்துள்ளது.
எப்போதும் சாரல் வீசும் இந்த மண், சென்னை மாநகரத்திலிருந்து வந்த எனக்கு மிகவும் இதமாக உள்ளது. அனைத்து வளங்களையும் பெற்றுள்ள ஒரு மாவட்டம் தென்காசி.
விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்த மண் இது.

புலித்தேவருக்கு நெற்கட்டும் செவலில் மணிமண்டபம் அமைத்துக் கொடுத்தது கலைஞர் ஆட்சியில்.
பராக்கிரபாண்டியரால் கட்டப்பட்டுள்ள பழமையான கோவிலுக்கு தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கோயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது கழக தலைவர் கலைஞர் ஆட்சியில் தான்.

இது அரசு விழாவா, இல்லை எங்கள் கட்சியின் மாநில மாநாடா என்று கேள்வி எழுப்பும் வகையில் இந்த விழாவினை தென்காசி மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது.

கழக ஆட்சி தொடங்கி 19 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை தமிழக மக்களுக்கு செய்யப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்து நெஞ்சை நிமிர்த்து பதில் அளிப்பேன். ஏனென்றால் அவ்வளவு சிறப்பான திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது.

 உதாரணமாக, தென்காசி மாவட்டத்தில் மட்டும் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்கள் பற்றி இப்போது கூறுகிறேன்.

11490 மக்கள் குறைதீர் மனுக்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
 27 கோடியே 77 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், 49,900 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். 2990 திருநங்கைகள் பலன் அடைந்துள்ளனர். இப்படி பல்வேறு சாதனைகளை தென்காசி மாவட்டத்தில் மட்டுமே சொல்லிக் கொண்டே போகலாம்.

தென்காசி மாவட்டம் வினைதீர்த்த நாடார் பட்டியை சேர்ந்த 3-வகுப்பு படிக்கக்கூடிய ஒரு மாணவி ஆரதனா, ஒரு கடிதம் எனக்கு எழுதினார். அதில் தான் படித்து வரும் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கேட்டிருந்தார்.

அவரது கோரிக்கை இந்த மேடையிலே நிறைவேற்றபட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் எந்த நலத்திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என தமிழக எதிர்க்கட்சித் எடப்பாடி பழனிச்சாமி புலம்பிக் கொண்டிருக்கிறார்.

எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம், உணர்வுபூர்வமாக இருக்கிறோம்.

தமிழகத்தை நாட்டின் தலைசிறந்த மாநிலமாக உருவாக்குவதை எங்களது குறிக்கோள்

ஒன்றிய அரசு சார்பில் வெளியிடப்படும் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தாலே தமிழகத்தின் வளர்ச்சி தெரியும்.

குற்றாலத்தில் இருந்து விழா நடைபெறும் மேடைக்கு சுமார் 10 நிமிடங்களில் வந்து விடலாம். ஆனால் நான் வருவதற்கு ஒரு மணி நேரங்களுக்கு மேலாக ஆனது. அதற்கு காரணம் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வழிநெடுகிலும் மக்கள் அளித்த வரவேற்பு தான் காரணம் .

திருநெல்வேலியில் இருந்து இந்த மாவட்டம் பிரிந்திருந்தாலும் தென்காசி மாவட்டத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் எனது தலைமையிலான அரசு நிறைவேற்றி தரும்.

தொடர்ந்து, விழா அரங்கில் இருந்து இலத்தூர், இடைகால் கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர் வழியாக ராஜபாளையம் செல்கிறார். அவர் செல்லும் வழியில் திமுகவினர் சார்பில் அவருக்கு வழிநெடுகிலும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via