அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

by Editor / 25-12-2022 10:01:36pm
அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அச்சன்கோவில் தர்ம சாஸ்தா ஐய்யப்பன் திருக்கோவிலில் கடந்த சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் திருவிழாவானது விமர்சையாக தொடங்கிய சூழலில், அதற்கு முந்தைய நாள் திருவிழாவின் போது சாமியை அலங்காரம் செய்வதற்காக தங்க ஆபரண நகைகள் புனலூர் பகுதியில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டது.

 இந்த நிலையில், திருவிழா தொடங்கி இன்று 9-ம் திருவிழா மிக சிறப்பாக அச்சன்கோவில் ஐய்யப்பன் கோவிலில் நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்வு மதியம் தொடங்கிய நிலையில், ரத வீதியில் ஊர்வலமாக சென்ற தேரில் ஐய்யப்பர் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில், ஏராளமான தமிழக - கேரள பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்பொழுது, ஐய்யப்பன் கோவில் எதிரே உள்ள கருப்பசாமி கோவிலில் 'கருப்பன் துள்ளல்' நிகழ்வானது வெகு விமர்சையாக நடைபெற்றது. 

 குறிப்பாக, தமிழகத்தில் தான் கோயில்களில் தேரோட்ட நிகழ்வு என்பது விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்த கலாச்சாரம் என்பது குறைவு என்ற போதும், தமிழக-கேரளா எல்லை பகுதியான அச்சன்கோவில் ஐய்யப்பன் கோவிலில் நடைபெறும் இந்த தேரோட்டம் நிகழ்வானது மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், நாளையுடன் திருவிழாவானது நிறைவு பெற உள்ள சூழலில் நாளை ஐய்யப்பன் ஆராட்டு நிகழ்வானது மிக சிறப்பாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
 

Tags :

Share via