புகார் கொடுக்க வந்த மூதாட்டியை தரக்குறைவாகப் பேசிய காவலர்; வைரலாகும் வீடியோ

by Admin / 14-02-2023 09:47:31pm
புகார் கொடுக்க வந்த மூதாட்டியை தரக்குறைவாகப் பேசிய காவலர்; வைரலாகும் வீடியோ

புகார் கொடுக்க வந்த மூதாட்டியை காவலர் ஒருவர் தரக்குறைவாகப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு, மூதாட்டி ஒருவர் புகார் கொடுக்க வந்துள்ளார். ஆனால் அந்த மூதாட்டியின் புகாரை காவலர்கள் எடுத்துக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும் தொடர்ந்து அந்த மூதாட்டி காவல் நிலையம் வந்திருக்கிறார். சம்பவத்தன்று கண்ணீர் மல்க காவல் நிலையம் வந்த மூதாட்டியை காவலர் ஒருவர், “உனக்கு இதுவே வேலையா போச்சு... போயிட்டு சாயங்காலம் வா...” எனக் கூறியுள்ளார்.ஆனால் அந்த மூதாட்டி வீட்டிற்குச் செல்லாமல் பள்ளிபாளையம் காவல் நிலைய வாசலிலேயே அமர்ந்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த காவலர் அந்த மூதாட்டியை தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்த நிலையில் தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து தரக்குறைவாக நடந்து கொண்ட காவலருக்கு எதிராகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via