பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக பொதுச்செயலாளர் வேட்புமனு தாக்கல் தொடக்கம்.

by Editor / 18-03-2023 10:55:37am
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக பொதுச்செயலாளர் வேட்புமனு தாக்கல் தொடக்கம்.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்த நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20ம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை 21ம் தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளருக்கான தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு கீழ்காணும் தகுதிகள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்து ஆண்டுகள் தொடர்ந்து அதிமுக உறுப்பினராக இருக்க வேண்டும்.
தலைமைக்கழக பொறுப்புகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பதவி வகித்திருக்க வேண்டும்.
அமைப்பு ரீதியிலான 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும்.

ஒரு மாவட்ட செயலாளர் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளருக்கு முன்மொழிய முடியாது.
அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பொதுச்செயலாளர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்.

கட்சியின் நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் நிர்வகிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு.

இதனிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி 50 போலீசார் இரவு, பகலாக சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் கூடுதல் பாதுகாப்பு கோரி அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதால், அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via