நிதி நிறுவனம் ரூ. 161 கோடி சுருட்டல் - கணவன்-மனைவி கைது

by Staff / 22-03-2023 01:26:03pm
நிதி நிறுவனம் ரூ. 161 கோடி சுருட்டல் - கணவன்-மனைவி கைது

சென்னையில் ஏற்கனவே ஆருத்ரா ஹோல்டு நிறுவனம், ஹிஜாவு அசோசியட்ஸ் போன்ற மோசடி நிதி நிறுவனங்கள் 10 ஆயிரம் கோடிக்கு மேல் பொதுமக்கள் முதலீட்டுத்தொகை பெற்று மோசடி வழக்கில் சிக்கியுள்ளன. இந்தநிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் செயல்படும் ஆம்ரோ கிங்ஸ் என்ற நிறுவனமும் மோசடி வழக்கில் சிக்கி உள்ளது. ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 10 சதவீதம் லாபத்தில் பங்கு தரப்படும், என்றும் 22 மாதங்களில் முதலீட்டுத்தொகை திருப்பித்தரப்படும், என்றும் அறிவிப்பு வெளியிட்டனர். அதை நம்பி 3 ஆயிரம் பேர், முதலீட்டுத் தொகையைக் கட்டினார்கள். ரூ. 161 கோடியை சுருட்டிய ஆம்ரோ கிங்ஸ் நிறுவனத்தினர் மீது அசோக்நகரைச் சேர்ந்த சாந்தகுமார் உள்ளிட்ட 3 ஆயிரம் பேர், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். ஐ. ஜி. ஆசியம்மாள் உத்தரவின்பேரில், சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆம்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரான ராஜராஜன், இயக்குனரான அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் அவர்களது உறவினர்கள் மறைமலைநகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களது வீடு, அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via