தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிலுவை வழக்கு: சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்ற ஒப்புதல்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மதுரைக் கிளையில் நிலுவையில் வழக்குகளை முதன்மை அமர்வுக்கு மாற்ற சென்னை ஐகோர்ட் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம், வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் தமிழக அரசு அளித்த அறிக்கையை அடுத்து, தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கை முடித்து வைத்தது.
இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைத்ததுடன், இந்த வழக்கை முதன்மை அமர்வுக்கு மாற்றம் செய்தும் உத்தரவிட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மதுரை கிளையில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குகளை சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வுக்கு மாற்ற வேண்டும் என தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மதுரைக் கிளையில் உள்ள வழக்குகளை சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்ற ஒப்புதல் தெரிவித்தனர்.
Tags :