தமிழகத்தில் இனி இரவு 9 மணி  வரை கடைகள் திறந்திருக்கும்

by Editor / 12-07-2021 03:46:50pm
தமிழகத்தில் இனி இரவு 9 மணி  வரை கடைகள் திறந்திருக்கும்

 


தமிழகத்தில் அனைத்து கடைகளும்  இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு திங்கள்  காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த்தொற்று நிலையை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு 19.7.2021 காலை 6 மணி வரை நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். மேலும், ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள்  இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. அந்த வகையில் உணவகங்கள், டீக்கடைகள், அடுமனைகள் (பேக்கரி), நடைபாதை கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்படும்.
அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்க ளில், கை சுத்திகரிப்பான்கள் கட்டா யமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவிகொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குளிர்சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
கடைகளின் நுழைவுவாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, புதுச்சேரிக்கான பஸ் சேவை இன்று தொடங்கியது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத்தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதிச்சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மாநிலங்களுக்கு இடையே தொடர்ந்து பஸ் போக்குவரத்துக்கு தடை உள்ளது. சினிமா தியேட்டர்கள், மதுக்கூடங்கள், நீச்சல் குளங்களுக்கு அனுமதி இல்லை. பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படவில்லை.

 

Tags :

Share via