தமிழகத்தில் டெங்கு, ஜிகா வைரஸ்  பரவலை தடுக்க தலைமைச் செயலாளர்  ஆலோசனை

by Editor / 12-07-2021 03:52:43pm
தமிழகத்தில் டெங்கு, ஜிகா வைரஸ்  பரவலை தடுக்க தலைமைச் செயலாளர்  ஆலோசனை

 

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், டெங்கு, ஜிகா வைரஸ் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து கண்காணிப்பு பணிக்குழுவுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு சென்னையில்  ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் 13 பேர் கொண்ட மருத்துவ கண்காணிப்பு பணிக்குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்திருந்தார். இந்த குழுவில், அரசு அலுவலர்கள் அல்லாத 4 பேரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மற்றும் மருத்துவ கல்வி இயக்குனர் உள்பட 9 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இந்த குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கை, பாதிப்பு நிலவரங்கள் குறித்து கண்காணிப்பு செய்து வருகின்றனர். அத்துடன் அரசுக்கு தேவையான யோசனை, தகவல்களையும் இந்த குழு வழங்கி வருகிறது.
இந்தநிலையில், கொரோனா 3-வது அலையை தடுப்பது, டெங்கு, ஜிகா நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ கண்காணிப்பு பணிக்குழுவுடன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கொரோனாவின் 3-வது அலையை தடுப்பது தொடர்பாக ஆலோசனை நடந்தது. அரசு மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் டெங்கு, ஜிகா வைரஸ், டெல்டா பிளஸ் பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2 ஆயிரத்து 900 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் மழைக்காலங்களில் பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்டந்தோறும் சுகாதாரப் பணிகளை விரைந்து செயல்படுத்துவது குறித்தும் விவாதம் நடந்தது.
கேரளா மாநிலத்தில் ஜிகா வைரஸ் 13 பேருக்கு பரவி உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தை யொட்டிய பாரசாலையை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது மேலும் பரவாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அத்துடன் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via