ஆடியை தேங்காய் சுட்டு வரவேற்ற பொதுமக்கள்

by Editor / 17-07-2021 08:17:07pm
ஆடியை தேங்காய் சுட்டு வரவேற்ற பொதுமக்கள்

ஆடி முதல் நாளை வரவேற்கும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேங்காய் சுடும் திருவிழாவை கரூர் மக்கள் வெகுவிமர்சையாகக் கொண்டாடினர்.

தட்சிணாயன புண்ணியகாலமான ஆடிமாதம் பிறந்துள்ளது. ஆடி மாதத்தின் முதல் நாளில் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் உள்ள ஆற்றின் கரையோரம் உள்ள கிராமப்பகுதிகளில் தேங்காய் சுடும் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாக்கள் நிறைந்த ஆடி மாதத்தைக் கோலாகலமாகத் தொடங்கிவைப்பதில் தேங்காய்ப் பண்டிகைக்கு முக்கியப் பங்கு உண்டு.ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு தேங்காய் சுடுவதற்கான அழிஞ்சி குச்சிகள் சேலம் பட்டை கோயில், பால்மார்க்கெட் பகுதியில் கட்டு கட்டாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ஆடி18ஆம் நாளன்று முடிவுக்கு வந்தது. கரூர் மாவட்டத்தின் காவிரி மற்றும் அமராவதி ஆற்றங்கரகிராமங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும், திருமாநிலையூர், கரூர் படிக்கட்டுத்துறை, பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் அமராவதி ஆற்றின் கரையோர மக்களும், காவிரிக் கரையோர பகுதிகளில் வசிக்கும் வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம், புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த தேங்காய் சுடும் பாரம்பரிய விழா நடைபெற்றது. இதில் சிறுவர்கள் பெரியவர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் பங்கேற்று, புதுமண தம்பதிகளும் பங்கேற்ற தங்களது நெகிழ்ச்சியை தெரிவித்தனர்.

 

Tags :

Share via