பள்ளிகளில் ஆசிரியர் பணியிட மாறுதல் விரைவில் கலந்தாய்வு -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

by Editor / 21-07-2021 05:29:50pm
பள்ளிகளில் ஆசிரியர் பணியிட மாறுதல் விரைவில் கலந்தாய்வு  -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

 


முதல்-அமைச்சரின் ஆலோசனையை பெற்று பள்ளிகளில் ஆசிரியர் பணியிடமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சி சோம ரசம் பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்ட 2 கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிதிறந்து வைத்தார். இதையடுத்து பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பை ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். அதன்படி அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து வருகிறேன். அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. ஆசிரியர் பணிநிரவல் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக மே மாதம் நடைபெற வேண்டிய பணியிட மாறுதல் கலந்தாய்வு இந்தாண்டு நடத்த முடியவில்லை.
முதலமைச்சரின் ஆலோசனையை பெற்று விரைவில் பணியிடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்பிறகு எந்தெந்த பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறதோ, அது சரி செய்யப்படும். கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்தவும் விரிவுப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் உயர்தர ஆய்வகங்கள் உள்ளன. கொரோனா பரவலால் பள்ளிகள் செயல்படாமல் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் பயன்பாடின்றி உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து அறிக்கை வந்த பின்பு இயங்காத கணினிகள் மாற்றப்படும்.
பிளஸ்-2 வில் கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள் அக்டோபரில் தேர்வு எழுதலாம். கொரோனா கட்டுக்குள் வந்தால் மட்டுமே அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு அந்த தேர்வும் நடத்தப்படும். அவ்வாறு தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியின்போது பள்ளியில் சிலம்பம் சுற்றி அசத்திய 2 மாணவிகளை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பாராட்டினார்.இதையடுத்து திருச்சி மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சியில் 100 சதவீதம் எழுத்தறிவித்தல் இயக்கத்தை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் அஞ்சலை என்ற பெண்ணுக்கு அவர் எழுத்து பயிற்சி அளித்தார். அப்போது அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், "கிராமப்புறங்களில் கைரேகை வைக்கும் சூழல் இன்றளவும் உள்ளது. கல்வியறிவு இல்லாத முதியவர்களுக்கு எழுத்தறிவித்தல் திட்டத்தின் கீழ் கையெழுத்திடும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு கல்வியறிவில் 81 சதவீதம் உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் கல்வியறிவில் தமிழகம் 100 சதவீதம் இருக்கும் வகையில் எங்களுடைய செயல்பாடு இருக்கும்.ஏற்கனவே உள்ள இந்த திட்டத்தை மெருகேற்றும் வகையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கு கையெழுத்து போட தெரியவில்லை.
தமிழகம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழ வேண்டும் என்ற நோகத்தில் எழுத்aதறிவித்தல் இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இந்த திட்டத்தின் கீழ் 69 நாட்களில் எழுத பழக்கி விடுவோம்" என்று கூறினார். 

 

Tags :

Share via