விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ. 80 லட்சம் இழப்பீடு

by Staff / 13-08-2023 02:57:47pm
விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ. 80 லட்சம் இழப்பீடு

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டிலும், சங்ககிரி, மேட்டூர், ஆத்தூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கோர்ட்டுகளிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில், விபத்து, சிவில், காசோலை, குடும்ப நலம், உரிமையியல் உள்பட 271 வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது. சேலம் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். சார்பு நீதிபதி தங்கராஜ் முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து சமரசத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் இருதரப்பினரும் கலந்து கொண்டு தங்களது வழக்குகளை முடித்துக்கொண்டனர்.ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த மணிராஜன் (வயது 33) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி புதுக்கோட்டையில் சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் தலையில் அடிபட்டு கை, கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து விட்டன. இது குறித்து மணிராஜனின் குடும்பத்தினர் சேலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் அந்த வழக்கு நேற்று சமரசத்திற்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட மணிராஜனுக்கு ரூ. 80 லட்சம் இழப்பீடு தொகைக்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.

 

Tags :

Share via