அ. தி. மு. க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

by Staff / 13-08-2023 03:04:32pm
அ. தி. மு. க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ. தி. மு. க. கட்சி அலுவலகத்தில் மதுரை மாநாட்டு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

நாங்குநேரியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. இளம் வயதில் கல்விக்கூடங்களில் இந்த சாதி சண்டையில் மாணவர்கள் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. மாணவர்களுக்கு நல்லொழுக்கம் ஏற்படுத்தும் இடம் கல்விக்கூடம். அந்த இடத்தில் இந்த நிகழ்வு ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக வீட்டுக்கு சென்று தாக்கப்பட்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த விடியா தி. மு. க. ஆட்சியில் இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டது கண்டிக்கத்தக்கது.

கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட அ. தி. மு. க. அரசு இருக்கின்ற காலத்தில் உச்சநீதிமன்றத்தின் மூலம் நிரந்தர தீர்ப்பு பெற்று உள்ளது. அதன்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற தீர்ப்பை பெற்று உள்ளோம். அதன் அடிப்படையில் மாதாந்திர கூட்டம் நடைபெறுகிறது.

 

Tags :

Share via