கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது

by Staff / 28-08-2023 02:39:34pm
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சி செல்லிபாளையம் காலனியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 37), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு அனிஷ், ஆகாஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 23-ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் செல்லிப்பாளையம் பகுதியில் ஒரு வளையில் சென்ற போது எதிரே வந்த வாகனம் ேமாதி பெரியசாமி இறந்ததாகவும், பிரேமா காயமின்றி தப்பியதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மோகனூர் போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்தனர். பெரியசாமி உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அதன்பிறகு பிரேமாவின் நடவடிக்கையை போலீசார் கண்காணித்தனர். போலீசாரின் கழுகு பார்வையில் இருந்து பிரேமாவால் தப்ப முடியவில்லை. அதாவது, கணவர் இறந்த பிறகும் பிரேமா மகிழ்ச்சியாக இருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பெரியசாமி கட்டிட மேஸ்திரியாக இருந்தாலும், பிரேமா மோகனூரில் உள்ள தனியார் பேக்கரிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அங்குள்ள ஒரு நபருடன் கடந்த 4 மாதங்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையறிந்த கணவர் பெரியசாமி, பிரேமாவை கண்டித்துள்ளார். மேலும் கள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். எனவே கணவனை கொலை செய்தால் மட்டுமே கள்ளக்காதலனை சந்திக்க தடை இருக்காது என பிரேமா நினைத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கள்ளக்காதலனிடம் கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து விபத்து நடந்தது போல் நாடகமாட முடிவு செய்தனர்.

அதன்பிறகு இரவில் காது வலிக்கிறது என்று பிரேமா கணவரிடம் கூறவும், அவரும் மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல தயாராகி உள்ளார். இதற்கிடயே பிரேமா தனது கள்ளக்காதலனுக்கு தகவல் கொடுத்துள்ளார். மோகனூர் செல்லும் வழியில் ஒரு வளைவில் பிரேமாவின் கள்ளக்காதலன் நின்று கொண்டிருந்தார். அவர், பெரியசாமி மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். அதன்பிறகு உறவினர்களிடம் வாகனம் ஒன்று மோதி கணவர் இறந்து விட்டதாக பிரேமா தகவல் கொடுத்துள்ளார். கள்ளக்காதலன் தப்பி சென்று விட்டார்.

இதற்கிடையே போலீசாரின் ரகசிய நடவடிக்கையில் பிரேமா கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதலனும் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெரியசாமி கொலையில் பிரேமா, அவருடைய கள்ளக்காதலனுக்கு மட்டும்தான் தொடர்பா? அல்லது வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via