கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்

by Editor / 26-09-2021 11:14:05am
கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்

மத்திய வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த மண்டலமாகி மாறியுள்ளது. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு தென்கிழக்குக்கு 510 கிலோ மீட்டர் தொலைவிலும், கலிங்கப்பட்டினத்தில் இருந்து கிழக்கு, வடகிழக்குக்கு 590 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயலுக்கு "குலாப்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தீவிர புயலாக அடுத்த 12 மணி நேரத்தில் அதாவது இன்று மாலை அல்லது இரவுக்குள் தீவிர புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் நாளை மாலை விசாகப்பட்டினம்-கோபால்பூருக்கும் இடையே வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த புயலையொட்டி நாகை, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர் துறைமுகத்திலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் குமரி கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் இன்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நேரடி தாக்கம் இருக்க வாய்ப்பில்லை. ஒரு சில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது சில பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது.

கடலூர் மாவட்டம் இயற்கை பேரிடர்களால் அதிகம் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டம் என்பதால் இங்கு எப்பொழுதுமே முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்வது வழக்கம், தற்பொழுது கூட இன்னும் இரண்டு மாதங்களில் அதாவது நவம்பர் மாதம் முதல் மழைக்காலம் என்பதால் கடலூர் மாவட்டம் அதில் அதிகமாக பாதிக்கப்படும் ஆதலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் செல்வதற்கு உதவும் வகையில் பல்வேறு பகுதிகளில் அடைப்பகளுடனும் சரியாகவும் இல்லாத மழை நீர் செல்லும் கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. 

 

Tags :

Share via