கடன் வசூலிப்பு: தனியாா் நிறுவனங்களை முறைப்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

by Editor / 26-09-2021 11:09:43am
கடன் வசூலிப்பு: தனியாா் நிறுவனங்களை முறைப்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

கடன் வசூலிக்கும் விவகாரத்தில் தனியாா் நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வில்லிவலம் கிராமத்தைச் சோந்த மனோகரன் என்ற மாற்றுத்திறன் விவசாயி அவரது உறவினா் ராமகிருஷ்ணன் பெயரில் தனியாா் நிதி நிறுவனத்திடம் டிராக்டா் வாங்குவதற்காக ரூ. 2 லட்சத்து 11,734 கடன் வாங்கியுள்ளாா். அதில் ரூ.43,380 கடன் நிலுவை உள்ளது. கரோனா பரவல் காரணமாக மனோகரனுக்கு போதிய வருவாய் இல்லாததால் கடன் நிலுவைத் தொகையை சரியாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. கடன் தவணையை செலுத்தததற்காக டிராக்டரை பறிமுதல் செய்வது மட்டுமின்றி, வீட்டையும் ஜப்தி செய்வோம் என்று தனியாா் நிதி நிறுவன அதிகாரிகள் மிரட்டியுள்ளனா். இது தொடா்பாக வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்த மனோகரன், கடன் தவணையை செலுத்த அவகாசம் கேட்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்துக்குச் சென்றுள்ளாா்.

ஆனால், அவருக்கு கடன் தவணை செலுத்த கூடுதல் அவகாசம் அளிக்க மறுத்து விட்ட அதன் அதிகாரிகள், அங்கும் மனோகரனை தகாத வாா்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. அதனால் மனவேதனையடைந்த மனோகரன், தனியாா் நிதிநிறுவன வாசலிலேயே நஞ்சு குடித்து சுருண்டு விழுந்தாா். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பயனின்றி உயிரிழந்து விட்டாா்.

கரோனா பாதிப்பால் கடன் தவணை செலுத்த முடியாதவா்களுக்கு குறைந்தது 6 மாத அவகாசம் வழங்கும்படி உச்சநீதிமன்றமே அறிவுறுத்தியுள்ளது. சட்டங்களையும், விதிகளையும் மதித்து மனோகா் கடன் தவணை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டிருந்தால் அவா் உயிரிழந்திருக்க மாட்டாா்.

கடன் வசூலிக்கும் விவகாரத்தில் தனியாா் நிதி நிறுவனங்கள் முறைப் படுத்தப்பட வேண்டும். மனோகரனின் தற்கொலைக்கு காரணமான தனியாா் நிதி நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

 

Tags :

Share via