சென்னை துணைமேயர், அமைச்சர்மருமகன் உட்பட 6 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு.

by Editor / 30-08-2023 09:33:38pm
சென்னை துணைமேயர், அமைச்சர்மருமகன் உட்பட 6 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு.

சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள்(42) என்பவரின் கணவர் மோகன் என்பவர், கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த 2021 ல் காலமானார்.

மோகன் உயிருடன் இருந்த போது அவரது நண்பர்களான (தற்போதைய சென்னை மாநகராட்சி துணை மேயரான) மகேஷ்குமார், கூட்டுறவு துறை அமைச்சரான பெரிய கருப்பன் மருமகன் குணசேகரன், செல்வராஜன், பாலமுருகன் மற்றும் திவாகர் ஆகியோருடன் பங்குதாரராக சேர்ந்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள "MARS MINES" என்ற நிறுவனத்தை துவக்கி, அதனை தென் சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2014ல் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2021ல் கணவர் மோகன் காலமாகிவிட்ட காரணத்தால், கணவருடைய பங்கை வாரிசுதாரர் என்ற முறையில் தனக்கும், மகளுக்கும் சேரவிடாமல், எங்களை மோசடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துதோடு, தங்களுக்குள் கூட்டுசதி செய்தும், போலி கணக்குகளை ஏற்படுத்தி வைத்ததாகவும் தனது கணவர் மோகன் இறந்த பின், கூட்டுசதியின் தொடர்ச்சியாக, நிறுவனத்தில் உள்ள பங்குகளை, தனக்கும் மகள் ஜெயலதா பாரதிக்கு தராமல் இருந்ததோடு, நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை, பங்குதாரர் மோசடி செய்ததாகவும் இசக்கியம்மாள் சென்னை மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்தார்.

மேலும், கடந்த 2023 ம் ஆண்டு மறைந்த மோகனை போலியாக பிரதிபலித்து, கணவர் உயிரோடு இருப்பது போன்று, போலியாக ஆவணம் தயாரித்து, கணவரின் கையெழுத்தை போலியாகயிட்டு, பங்குதாரர் நிறுவனத்திலிருந்து, வெளியேறியது போன்ற ஆவணத்தை தயாரித்து, அதற்கான படிவம் 5-ஐ

தென் சென்னை மாவட்ட பதிவாளர் சத்யப்பிரியாவிடம் தாக்கல் செய்ததாக புகாரில் தெரிவித்திருந்தார்.
புகார் அளிக்கப்பட்ட நாட்களில் இருந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் அமைச்சர் பெரிய கருப்பன் மருமகன் குணசேகரன், தென் சென்னை மாவட்ட சார் பதிவாளர் சத்திய பிரியா ஆகியோர் உள்ளிட்ட 6 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இசக்கியம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இம்மனு தொடர்பாக விசாரணை மேற்கொண்டதின் பேரில் நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 5-7-2023-ம் தேதி நீதிமன்ற பிறப்பித்த உத்தரவின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ் குமார், அமைச்சர் பெரிய கருப்பன் மருமகன் குணசேகரன், தென் சென்னை மாவட்ட சார் பதிவாளர் சத்திய பிரிதா உள்ளிட்ட 6 நபர்கள் மீது 6 பிரிவுகளின் போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோசடி செய்த புகாரில் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : சென்னை துணைமேயர், அமைச்சர்மருமகன்

Share via